புதன், 5 ஜூலை, 2017

பஜ்ஜி-சொஜ்ஜி 112 / ஆசிரியர் தாமஸ்


லேட்டா வருது பார் ஊர்சுத்தி” என்று வீட்டிற்கு வரும்போதெல்லாம் நம்மை நோக்கி இப்படிச்சொல்வதற்கெல்லாம் தகுதியான வாழ்க்கையை தான் வாழ்கிறோமா என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்வேன். ஆனால் என்னதான் வீடு செல்லாமல் ஊர் சுற்றினாலும், நாம் சுற்றும் தொலைவின் விட்டமோ ஐம்பது சொச்சம் கி.மீ ஆகவோ அல்லது சந்திக்கின்ற மனிதர்கள் அநேகமாக யாரும் இல்லாததாகவோ இருப்பதில் ’ஊர்சுத்தி’ என்கிற பட்டத்திற்கு தகுதியானவன் தானா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

இந்த ஆண்டிலிருந்து அவ்வாறாக இல்லை, ஏதாவது ஒரு வேலையும் சொல்லிவைத்தார் போல் வந்துவிடுகிறது. இந்த வாரம் அப்படி இரு சந்திப்பு, ஒன்றைப் பற்றி விலாவரியாகப் பேசவேண்டும். இன்னொன்றுக்கு வருகிறேன்.

கோபி சென்றிருந்தேன் இந்த வாரம். கல்லூரியில் மணிகண்டனின் மூன்றாம் நதியைச் சேர்த்துவிட்டு வந்தேன். பெருமையாக இருந்தது. கல்லூரியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று ஒரு போன். தாமஸ் தோழர்.

தாமஸ் தோழர் மணிகண்டனின் அறக்கட்டளை காரியங்களுக்கு உடன் நிற்கும் தோழமைகளில் ஒருவர். முக்கியமாக அவர் ஒரு தமிழ்தேசியவாதி. தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர், அரசியல் ஒவ்வாமைக்காரணமாக தன் கல்விப்பணியை மட்டும் முழுமையாக மேற்கொண்டு வருகிறார். கோபியிலிருந்து சுமார் ஐந்தாறு கி.மீட்டர் தொலைவில் தூய திரேசாள் முதனிலைப்பள்ளி எனும் தொடக்கப்பள்ளியை நிர்வகித்து நடத்தி வருகிறார். அவர் என்னை அழைத்தது அங்கே பள்ளிக்கு அழைத்துச்செல்ல..

கோபிச்செட்டிப்பாளையத்தில் மணியை அரசியலில் நிப்பாட்டினால் உருப்படியான ஒரு எம்.எல்.ஏவை சட்டமன்றம் பார்க்கும் என்று மனதினில் அடிக்கடி தோன்றும். மணிகண்டனின் பப்ளிஷர் என்றே அந்த ஊரில் பத்து நண்பர்களாவது தெரிந்து வைத்திருப்பேன். அத்தனை பேரும் அவ்வூரில் முக்கியப்பிரமுகர்கள். பொதுவாகவே அந்த ஊரில் உன்னைக் கொலை பண்ணுகிறேன் என்று மிரட்ட வேண்டுமென்றாலும் கண்ணூ என்று சேர்த்து விளிப்பதால் அன்பாக நாமே வயிற்றைக் காண்பித்து இங்கே குத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு பிரியம் வந்துவிடும் என்பது தனிக்கதை.

தாமஸ் தோழர், மிக எளிமையான மனிதர். தன் என்ஃபீல்டில் என்னை அழைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவரது தந்தை நல்லாசுரியர் மா. அரசு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த இப்பள்ளியை இப்போது இவர் நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியின் வயது 75. பவள விழா கொண்டாடியிருக்கிறது, மூன்று தலைமுறை மாணவர்களைக் கண்டிருக்கும் பள்ளி எனும் போது ஆர்வமாகத்தான் இருந்தது.
இந்தப் பள்ளியில் தான், மணிகண்டன் தொடுதிரை வகுப்பிற்கான ஏற்பாடுகளை அமைத்துக்கொடுத்திருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தேன். 

போகும் வழியில் அந்த ஊரின் வரட்சியைப் பற்றி விசனப்பட்டுக்கொண்டு வந்தார். தன் வாழ்நாளிலே எப்போதும் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடை காய்ந்துபோனதைப் பற்றி அவர் பேசும் போது, நமக்கு ஏதோ ஒன்று நெருங்கிக்கொண்டிருப்பதாய் ஒரு அவநம்பிக்கை சூழ்ந்து கொண்டிருந்தது. வற்றிப்போயிருந்த குளங்கள் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்தன. ஒன்று அவ்வூர் பொதுமக்களாக சேர்ந்து தூர் வாரிக் கொண்டிருப்பதாகவும் ஊருக்கு வெளியே இருக்கும் குளத்தை நிசப்தம் அறக்கட்டளையின் உதவியால் தூர் வாரிக்கொண்டிருப்பதாகவும் சொல்லும் போது. அன்று மணிகண்டன் பேசியது நினைவுக்கு வந்தது.
ஊருக்குள் இருக்கும் குளத்தை ஏன் மக்களே தூர்வாரக்கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார். மணி அறக்கட்டளை நடத்துவதில் நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம் எனப் புரிந்து கொண்டேன். முதல் வருட நூலகக்கொடையில், இந்தப் பள்ளிக்கு நிசப்தம் தரவில்லையாம். கிருத்தவ உதவி பெறும் பள்ளிகளென்றால் வசதி இருக்கத்தான் செய்யும் என்று தள்ளிப்போட்டுவிட்டாராம். பின்னர் அவரே அந்தப் பள்ளிக்கு வரும் உதவிகளின் அளவைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இந்தப் பள்ளிக்கான நூலகம் வைத்துக்கொடுத்துள்ளார்.


பள்ளிக்குள் செல்லும் பொழுது, ஒரு தொடக்கநிலைப்பள்ளி போல் இல்லை, ஒரு இடைநிலை, உயர்நிலைப் பள்ளி போல் இருந்தது. நல்ல விசாலமான, காற்றோட்டமுள்ள, மின் விசிறிகளுள்ள சத்துணவு வசதியுள்ள மிகவும் தரமான பள்ளியாக இருக்கிறது என்பதை வெளியில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் பள்ளியைப் பற்றி அதன் முன்னால் மாணவர்கள் குறும்படம் எடுத்திருப்பதாகக் காட்டினார்.
கொஞ்ச நேரம் மாணவர்களோடு உரையாடலாம் என்று சொன்னார். மாணவர்களோ எப்படிப் பேச, இலக்கியக் கூட்டம் என்றாலே. கரகரன்னு சரியா ட்யூன் பண்ணாத ரேடியோ போல் இருப்போமே என்று தயக்கத்தோடு உள்ளே நுழைந்தாலும், அவர்களைப் பார்த்தவுடன் உற்சாகம் பிறந்தது.


கொஞ்ச நேரம் உரையாடுவதிலேயே அவர்களுக்கு ஒழுக்கத்தோடு சேர்த்து கனவும் விதைக்கப்பட்டிருக்கிறதைப் புரிந்து கொண்டேன். ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்லும், ஒரு தேநீர் கடை கூட இல்லாத அப்பள்ளிக்கு பத்து கி.மீ தள்ளியிருக்கின்ற ஊரிலிருந்து கூட மாணாக்கர்கள் வருகிறார்கள் என்று அறியும் போது தான் ஆசிரியர்களின் ஈடுபாட்டைத் தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் இருக்கட்டும். ஏதாவது ஒரு அட்வைஸ் சொல்லலாமே என்று எல்லாரும் புக் வாசிக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க, அநேகத் தலைகள் மேலிருந்து கீழாய் அசைந்தன. Random sampling ஆக நீங்க என்ன படிச்சிங்க என்று ஒரு சிறுவனை அழைத்துக் கேட்க அவன் வாசித்தக் கதைகளைச் சொன்னான், வேறு ஒரு மாணவியைக் கேட்க அவள் ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசித்ததாகச் சொன்னாள், அபப்டியே இன்னும் இரண்டு மூன்று மாணவர்களை நானாகத் தெரிவு செய்து கேட்க, அவர்கள் எல்லோருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களென அறிந்து கொண்டேன்.
எப்படி இந்த ஆர்வம் மாணவர்களுக்கு சாத்தியமானது என்று தலைமை ஆசிரியரிடம் கேட்க. அதற்கும் மணிகண்டனின் பங்களிப்பைச் சொன்னார். வெறுமனே கட்டிவைத்த புத்தகங்கள் கூடப் பிரிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளைக் கண்டு சற்றே தளர்வடைந்ததால், புத்தகம் கொடுக்கும் பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டால் நன்றாக இருக்குமென இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.


அதன்படி, அப்பள்ளியில் வாரத்திற்கு மூன்று வகுப்புகள் நூலகத்திற்கான வகுப்புகளாக ஒதுக்கப்படுகின்றன, ஒவ்வொரு வெள்ளி மாலையும் அவர்களுக்கு வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு, அவை திங்கள் பெறப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் உள்ள கையேட்டில் அவர்கள் வீட்டுப்பாடக் கணக்கைப் போல, நூலக வாசிப்பிற்கான பக்கங்களும் இருக்கின்றன. அதில் அவர்கள் வாசித்த புத்தகங்களின் பட்டியல் இருக்கின்றன, பள்ளி தொடங்கிய இந்த ஒற்றை மாதத்தில் மூன்று புத்தகங்கள் வரை படித்த மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த கையேட்டின் பின்பகுதியில் ஒரு பயோடேட்டா இருக்கிறது மாணவர் பற்றிய தகவல், அதில் கடைசி வரியில் லட்சியம் என்று இருந்தது.

லட்சியம் : அறிவியல் விஞ்ஞானி.
அவன் அந்த வாரம் படித்த புத்தகம் – அறிவியல் விளையாட்டுகள்.


மிகவும் சந்தோசமாக இருந்தது. வாசிப்பை ஊக்கப்படுத்துவது எங்கிருந்து தொடங்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாகச் செயல்படுத்தியிருக்கிறீகள் என்று ஆசிரியரை உளமாரப் பாராட்டிவிட்டு, நெகிழ்வோடு திரும்பி வந்தேன்.




நீங்கள் மிகச்சரியாகப் போய்க்கொண்டிருக்கிறீர்கள் மணி. உங்களோடு பயணிப்பதில் எனக்கு மிகவும் பெருமை தான். ஆனால் என்ன என்னை கவிஞன் என்று சொல்லிவைத்திருக்கிறீர்கள், தாமஸ் தோழரும் என்னைக் கவிஞன் என்று மாணவர்களிடம் அறிமுகப்படுத்திவிட்டார். நானும் ஒரு கவிதை எழுதனும்ங்கற சித்தம் வந்துவிட்டதாக உணர்கிறேன்.


ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக